Thursday, July 28, 2011

உன்னைத் தவிர்த்து ஓர் கவிதை

வருடிக் கொடுத்து நிதம் தூங்க வைக்கிறாய்
கதைகள் பேசுகிறாய்
சின்ன சின்னதாய் சண்டைகள் போடுகிறாய்
கை பற்றி காதல் உரைக்கிறாய்
இல்லாத நேரங்கள் சுமையாவதாய் 
அழகிய பொய்கள் சொல்கிறாய் . . 
மழை நாட்களை அழகாக்குகிறாய். . 
சில நேரங்களில் குடை தாண்டி பெய்கிற மழையில் 
உன்னோடு நானும் என்னோடும் நீயும் என.  .
கனவுகள் வந்து அடைத்துக் கொள்கின்றன
உன்னைத் தவிர்த்து எழுத  நினைத்த கவிதையின் பக்கத்தை!

Wednesday, July 13, 2011

இறுதியாய் ஒரு முறை உன்னோடு வீழ்கிறேன் காதலில். . .

துவள்கிற சமயங்களில் என் தலை கோதும் விரல்களை 
அழுத்தி பிடித்துக் கொள்கிறேன் கனவிலே. . 
என்ற பழைய கவிதையின் கடைசி வரியை 
புதிதாய் ஒரு முறை குறிபேட்டில் எழுதி
இருமுறை அழுத்தமாய் அடிகோடிட்டு சாய்கையில்
உண்மையாகவே 
பக்கமாய்  நீ வருகிறாய். . 
கன்னம் வருடி 
கலைத்து போகிறாய் 
கவலைகளையும் கலக்கங்களையும்..  
இறுதியாய் ஒரு முறை 
உன்னோடு வீழ்கிறேன் காதலில். . .
நிலா!